அமெரிக்க துப்பாக்கி சூடு, பொதுமக்களின் ஆயுதங்களை பறிக்கும் அரசும் பறிக்க கோரும் முற்போக்காளர்களும்

அமெரிக்க பள்ளி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து மீண்டும் ஒரு விவாதமும் கூக்குரல்களும் துவங்கியுள்ளது, அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாராம், துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் என்று. இதில் அறிவுஜீவி தளத்தில் இயங்குபவர்களும் கூட இதையே சொல்ல ஆரம்பித்துள்ளது தான் சற்று வேதனையான விசயம்.

எப்போதுமே ஆயுதங்கள் அதிகாரம் கொண்டவை, எவனிடம் ஆயுதம் உள்ளதோ அவனே ஆதிக்கம் செய்ய முடியும்,  எவனிடம் ஆயுதம் உள்ளதோ அவனால் தான் ஆதிக்கத்தை எதிர்க்கவும் முடியும் எனவே தான் அரசு ஆயுதங்களை தம்மிடையே குவித்துக்கொண்டும் பொதுமக்களை நிராயுதபாணியாகவும் வைத்திருக்கும்.  ஈழத்தில் புலிகளை சமாதான  ஒப்பந்தத்தில் கையெழுத்திடவைத்து முதலில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் செய்ய சொன்னது அவர்களின் ஆயுதங்களை ஒப்படைக்க சொன்னது, அதே போல புலிகளும் தங்கள் ஆளுமைப்பகுதிகளில் டெலோ, ஈபிஆர்எல்எஃப் இயக்க போராளிகள் தங்கள் ஆயுதங்களை களைய வேண்டும் என்று கெடுவிதித்து செய்தன.  எந்த அரசாங்கமும் எந்த போராளி அல்லது தீவிரவாத இயக்கங்களுடன் பேச்சு வார்த்தையோ ஒப்பந்தத்துக்கோ வரும் போது முதலில் கேட்பது அரசுக்கு எதிராக போராடும் இயக்கங்கள் ஆயுதங்களை களைய வேண்டும், அரசுக்கு எதிராக செயல்படும் ஆயுத இயக்கங்கள் கேட்பது ஆயுதங்களை களையமாட்டோம்.

சுகுணாதிவாகர் ஒரு முறை எழுதியது இன்னமும் நினைவில் உள்ளது "துப்பாக்கி குழலில் இருந்து தான் அதிகாரம் பிறக்கும் என்றால் பெரிய துப்பாக்கி குழலிலிருந்து பெரிய அதிகாரம் பிறக்கும்"

அரசாங்கத்து எதிரான  இயக்கங்கள் ஆயுதம் வைத்திருப்பதை மட்டுமல்ல, அரசாங்கத்துக்கு உட்பட்ட பொதுமக்களும் ஆயுதம் வைத்திருப்பதை அரசு தனது அமைப்பிற்கான அச்சுறுத்தலாகத்தான் பார்க்கிறது.  முதலில் பொதுமக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதை பற்றி சொல்வதென்றால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் "அரசியல் எனக்கு பிடிக்கும்" என்ற நூலில் அரசு பற்றி எழுதியதிலிருந்து ஆரம்பிக்கலாம்... வேட்டைகலாச்சாரத்தில் இருந்த ஆதிமனிதன் அத்தனை பேரிடமும் ஆயுதங்கள் உண்டு, விலங்குகளை வேட்டையாடவும் விலங்குகளிடமிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவும் எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாக்கவும் மனிதர்கள் அத்தனை பேரும் ஆயுதங்களை தரித்திருந்தனர். காட்டை விட்டு வெளியேறி விவசாயம், சமவெளி வாழ்க்கை ஆற்றுப்படுகை நாகரிகம் என்று ஆரம்பித்த போது அரசுகள் தோன்ற ஆரம்பித்தன. அரசு தோன்ற ஆரம்பித்த உடன் முதன் முதலில் செய்த செய்கை என்ன வெனில் அது தனது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் மக்களிடமிருந்து ஆயுதங்களை களைந்தது. 

வேட்டை அல்லாத சமவெளி விவசாய நாகரீகத்தில் பொதுமக்களுக்கு ஆயுதங்கள் தங்கள் பாதுகாப்புக்கு மட்டுமே தேவைப்பட்டன. அரசு முதலில் மக்களிடமிருந்து ஆயுதங்களை களைந்த போது  ஆயுதமற்ற மக்களின் பாதுகாப்பை தான் ஏற்றுக்கொள்வதாக கூறியது, அதன் தொடர்சி தான் படை, இராணுவம், காவல் என எல்லாம் உருவாக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

தனி மனிதனின் ஆயுதம் கைக்கொள்ளாமல் இருக்க அவனது பாதுகாப்பை ஏற்ற அரசு தனிமனிதனின் பாதுகாப்பை பல நேரங்களில் உறுதி செய்வதில்லை, அரசு எந்திரங்களான காவல்துறை, இராணுவம் எதிரி நாடு மட்டுமின்றி சொந்த நாட்டு மக்களிடமே அத்துமீறலை செய்கிறது, இதற்க்கு பல்வேறு உதாரணங்கள் இருந்தாலும் கடந்த ஆண்டு நடந்த இம்மானுவேல் சேகரன் அவர்களின் குருபூசையின் போது நடந்த பரமக்குடி துப்பாக்கிச்சூடு ஆயுதமின்றி இருந்த தலித் மக்களின் மீது ஆயுதம் தரித்த அரசின் கையாளான காவல்துறையின் அத்து மீறல் கொலைகள்.  இந்த ஆண்டு முத்துராமலிங்கத்தேவர் குருபூசையின் போது ஆயுதமின்றி இருந்த தேவர் சமூகத்தின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அரசு கணக்கின் படி 11பேரை கொலை செய்தனர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர்.(ஆயுதமின்றி இருப்பவர்களை கொலை செய்வது என்பது சாதிவித்தியாசமில்லாமல் நடைபெறுவது, சமீப காலங்களில் குருபூசையின் போது ஆயுதங்களை கொண்டு செல்வது கிட்டத்தட்ட முற்றிலுமாக தடைசெய்யப்பட்டிருந்தது, அப்படியெனில் ஆயுதமின்றி வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை, அப்படி செய்திருந்தல் பரமக்குடியில் 6 தலித் மக்களும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள், குருபூசையில் 11 தேவர் சமூக மக்கள் கொலைசெய்யப்பட்டிருக்கமாட்டார்கள், அப்படி உறுதி செய்ய முடியாத போது அவர்கள் ஆயுதங்களை கைக்கொள்வதை தடைசெய்யக்கூடாது.

வெளிப்படையாகவே சொல்லலாம், அரசு தரும் பாதுகாப்பு போதாமல் எத்தனை எத்தனை கட்சி இயக்க தலைவர்கள் எத்தகைய பாதுகாப்புடன் ஆயுதங்களுடன் செல்கிறார்கள் என்பது அரசுக்கும் காவல்துறைக்கும் தெரியாதா என்ன? அவர்களை எல்லாம் விட்டு தான் வைக்கின்றன அரசு, ஏனெனில் அவர்கள் பாதுகாப்புக்கு பிரச்சினை வந்தால் சமூக சிக்கல்கள் வரும் என்பதால்.

தாளமுத்து நடராசன் என்ற காங்கிரஸ் பிரமுகர் தன் பண்ணை வீட்டில் கொள்ளையடிக்க வந்தவர்களால் கடுமையாக கொடூரமாக கொலை செய்யப்பட்டார், ஓசூரில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வீட்டில் புகுந்த 14 பேர் கொண்ட திருட்டு ரவுடி கும்பல் தாயையும் மகளையும் கட்டிப்போட்டு கற்பழித்தது, தற்போது திருடர்களால் கொள்ளையடிக்க வருபவர்கள் கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது, இங்கே தனிமனிதன் ஆயுதங்கள் வைத்திருக்க கூடாது என்னும் அரசு என்ன மாதிரியான பாதுகாப்பை தருகிறது?

ஆயுதம் என்பது பயன்படுத்தப்பட அல்ல, பயன்படுத்தப்படாமல் இருக்கவே, ஆயுதம் அதிகாரத்தை கொடுக்கும் போது அது மிகுந்த பொறுப்புணர்ச்சியையும் தருகிறது, அந்த பொறுப்பு இல்லாமல் குருபூசைகளின் போது முந்தைய காலங்களில் எடுத்து சென்ற ஆயுதங்களை கொண்டு பொதுமக்களையும் மாற்று சாதியினரையும் தொந்தரவு செய்ததால் தற்போது முற்றிலுமாக ஆயுதங்களை தடைசெய்ய இரண்டு சமூகங்களும் வன்முறைக்கு இலக்காகி உள்ளன.

ஒரு அரசாங்கத்தால் ஒவ்வொர் குடிமகனுக்கும் 24 மணி நேர பாதுகாப்பை உறுதி செய்வது செயல்முறையில் கொஞ்சம் சாத்தியமில்லாதது தான், எனவே ஒரு அரசு குடிமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதை தடை செய்யக்கூடாது, ஆனால் அதை முறைப்படுத்தி வைத்திருக்க‌ வேண்டும். 
ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவை பற்றி எப்போதுமே நிறைய எதிர்பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது, அதையும் வழக்கம் போலவே நம்பி வந்திருந்தோம் எதிரிகளுக்கு மனித உரிமை தருகிறதோ இல்லையோ அவர்கள் குடி மக்களின் பாதுகாப்பை அமெரிக்கா மற்ற எந்த நாட்டையும் விட அதிகமாக உறுதி செய்தே வந்துள்ளது. சில அடிப்படை மனித உரிமைகள்(அவர்கள் குடிமக்களுக்கு மட்டுமாவது) மற்ற நாட்டைவிட அங்கே உள்ளதாகவே தெரிகிறது. நாம் அமெரிக்காவில் அவ்வப்போது நடைபெறும் இம்மாதிரியான துப்பாக்கி சூட்டு கொலைகளை மட்டுமே அறிவோம், ஆயுதங்கள் தனிமனிதர்களிடம் இருப்பதால் எந்த அளவிற்க்கு அரசால் தடுக்க முடியாத பிற கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்திருந்தால் ஒரு வேளை அமெரிக்காவின் ஆயுதக்கலாச்சாரம் என்று கூக்குரல் இடும் முன் சற்று யோசிக்க தோண‌லாம்.

பொதுமக்களிடம் இருக்கும் ஆயுதத்தை களையாமல் இருக்கும் அமெரிக்க அரசு மற்ற எந்த அரசையும் விட எமக்கு சற்று முற்போக்காகவே தெரிகிறது. அப்போ இம்மாதிரியான துப்பாக்கி சூட்டு கொலைகளை தடுக்க என்ன செய்வது? என கேட்கலாம், தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் சாலைவிபத்துகளில் கொல்லப்படுகின்றனர், குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பதிலிருந்து, அனுமதிக்கப்பட்டதை விட வேகம், சாலைவிதிகள், கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் வண்டி ஓட்டுவது என மிகப்பெரும்பாலான விபத்துகளுக்கும் விபத்து மரணங்களுக்கும் காரணம் மிக மோசமான ஓட்டுனர்களே, எண்ணிக்கையில் மோசமான வாக ஓட்டிகள் ஏற்படுத்திய மரணங்களில்ன் எண்ணிக்கை இம்மாதிரியான துப்பாக்கி சூட்டி இறந்தவர்களை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும். ஆனாலும் இன்னும் டிரைவிங் லைசன்ஸு கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.

துப்பாக்கி கலாச்சாரம் என்று கூக்குரலிட்டு பொதுமக்களிடமிருந்து ஆயுதங்களை மொத்தமாக அரசாங்கத்தை களைய செய்வதை விட துப்பாக்கி வைத்திருப்பதை முறை படுத்துதல் வேண்டும். துப்பாக்கியை களைவது வேறு முறைப்படுத்துதல் வேறு, இந்த  உலகில் பொதுமக்களிடம் இன்னமும் ஆயுதங்களை விட்டு வைத்திருக்கும் அமெரிக்க அரசு நிச்சயம் என்னளவில் ஒரு முற்போக்கு அரசு தான்.